Offline
ஆசிரியரால் சுமார் மூன்று மணி நேரம் வெயிலில் நிற்கும்படி கட்டாயப்படுத்தப்பட்ட 11 வயது மாணவன்; வெப்பத் தாக்குதலுக்கு உள்ளானதில் ஊனமுற்றவரான சோகம்
News
Published on 05/31/2024

கோலாலம்பூர்:

சிலாங்கூரிலுள்ள ஒரு பள்ளியில் 11 வயது சிறுவனை அவரது ஆசிரியர் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு கடுமையான வெயிலில் நிற்க வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, அச்சிறுவன் வெப்பத்தாக்குதலுக்கு உள்ளானதில் அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நீண்ட நேரமாக கடுமையான வெயிலில் நின்ற காரணத்தினால் அச்சிறுவனுக்கு நரம்பு தொடர்பான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்பாங் மருத்துவமனை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவரை இனி உடற்குறையுள்ளவராக வகைப்படுத்தி மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அந்த மருத்துவமனை கடிதம் தந்திருப்பதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் 35 வயதான ஏ.டி. மோகன செல்வி கூறினார்.

முன்பு தமது சகோதரர்களுடன் சேர்ந்து விளையாடிய தமது மகன், தற்போது மற்றவர்களிடமிருந்து ஒளிந்து தமக்குத் தாமே பேசிக்கொள்வதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பாக, சிறுவனுக்குப் பாதிப்பு ஏற்பட காரணமாக இருந்த அனைவருக்கும் எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று வழக்கறிஞர் தினேஷ் கூறினார்.

Comments