Offline
மலாக்காவில் ஏற்பட்ட விபத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் மரணம்
News
Published on 06/03/2024

மலாக்கா:

ஜாலான் தாமிங் சாரியில் நேர்ந்த ஓர் விபத்தில், வயிற்றில் குழந்தையுடன் மோட்டார்சைக்கிளில் பயணியாகச் சென்ற 27 வயது நிறைமாத கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்தது அவ்வட்டார மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜூன் 1ஆம் தேதி இரவு 10.05 மணிக்கு நடந்த விபத்தின்போது, உயிரிழந்த மாது அவரின் 28 வயது கணவருடன் பயணம் செய்ததாகவும், இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

அப்போது 41 வயது இல்லத்தரசி ஒருவர் ஓட்டி வந்த காருடன் அவர்கள் இருந்த மோட்டார்சைக்கிள் மோதியது.

இவ்விபத்து காரணமாக கர்ப்பிணி பெண்ணுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதை அடுத்து, மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரும் அவர் வயிற்றில் இருந்த குழந்தையும் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாவலராகப் பணிபுரியும் கர்ப்பிணியின் கணவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் கார் ஓட்டுநர் காயங்களின்றித் தப்பித்ததாகவும் அறியப்படுகிறது.

 

Comments