Offline
Menu
இந்திய பங்குச்சந்தையில் பணமழை; பல லட்சம் கோடிகளை அள்ளிய முதலீட்டாளர்கள்!
Published on 06/05/2024 01:28
News

தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் இந்திய பங்குச் சந்தையில் எதிரொலித்தன.

நேற்று திங்கட்கிழமை காலை பங்குச் சந்தை இயங்கத் தொடங்கியதும் பணமழையில் முதலீட்டாளர்கள் ஆனந்தமாக நனைந்தனர். இலாபமாகக் கிடைத்த பல லட்சம் கோடி ரூபாய்களை அவர்கள் அள்ளினர்.

மக்களவைத் தேர்தலின் ஏழாம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை நிறைவடைந்ததும் கருத்துக்கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடத் தொடங்கின.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அந்தக் கருத்துக்கணிப்புகள் கிட்டத்தட்ட ஒரே குரலில் ஒலித்தன.

நேற்று (ஜூன் 3) காலை 9.17 மணிக்கு பிஎஸ்இ சென்செக்ஸ் எனப்படும் மும்பை பங்குச் சந்தை சாதனை அளவாக 2,178 புள்ளிகள் உயர்ந்து 76,139ஐத் தொட்டது. இது ஒரே நாளில் பதிவான 2.94 விழுக்காடு ஏற்றம்.

மற்றொரு பங்குச் சந்தையான நிஃப்டி 579 புள்ளிகள் உயர்ந்து 23,109ஐத் தொட்டது. இது 2.57 விழுக்காடு ஏற்றம் கண்டது.

பின்னர் 10.20 மணியளவில் சென்செக்ஸ் சற்று இறங்கி 76,080 என்று பதிவானாலும் நிஃப்டியின் பாய்ச்சல் தொடர்ந்தது. சந்தை தொடங்கியது முதல் 665.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 23,196.30 என உச்சத்தைத் தொட்டது நிஃப்டி.

 

Comments