Offline
பானி பூரியால் புற்றுநோய்?- உணவுப் பாதுகாப்பு துறை ஆய்வில் அதிர்ச்சி!
News
Published on 07/01/2024

பானி பூரிக்குப் பயன்படுத்தப்படும் சாஸ், மீட்டா காரா பவுடர் என ஐந்து வகையான பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பது கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோபி மஞ்சூரி மற்றும் கபாப்பில் புற்றுநோயை உண்டாக்கும் தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, செயற்கை வண்ணங்களைப் பயன்படுத்த கர்நாடக அரசு ஏற்கெனவே தடை விதித்துள்ளது. தற்போது பானி பூரி பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்க உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயத்துறை சத்தமில்லாமல் தயாராகி வருகிறது.

பானிபூரிக்கு பயன்படுத்தப்படும் சாஸ், மீட்டா காரா பவுடர் என ஐந்து வகையான பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத் துறையினர் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பானி பூரி மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். அப்போது, ​​பானி பூரி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் தரத்துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ​​“பானி பூரி குறித்து ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 243 மாதிரிகளை சேகரித்துள்ளோம். 41 மாதிரிகள் பாதுகாப்பற்றவை என்று கண்டறியப்பட்டது. அத்துடன் 18 மாதிரிகள் தரமற்றவை என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும் பானிபூரியில் 4-5 ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் மற்றும் துறை முதன்மை செயலாளரிடம் பேசி முடிவெடுக்கப்படும். 4-5 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. அது வந்த பின், கூட்டம் நடத்தி, பானி பூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.

பானி பூரியில் பயன்படுத்தப்படும் காரா மற்றும் மிட்டாவில் ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிக காரம் சாப்பிடுவதால் அமிலத்தன்மை மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. பானிபூரியை 5-7 வருடங்கள் சாப்பிட்டு வந்தால் அல்சர், புற்று நோய் வரும்” என்றார்.

Comments