Offline
பலத்த காற்றால் விழுந்து நொறுங்கிய சிவாஜி சிலை
News
Published on 08/28/2024

மும்பை: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை, பலத்த காற்று காரணமாகக் கீழே விழுந்து நொறுங்கியது. இந்தியக் கடற்படை நாள், ஆண்டுதோறும் டிசம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கடற்படை சார்பில், கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில், சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) வீசிய பலத்த காற்றால் சிவாஜியின் சிலை கீழே விழுந்து நொறுங்கியது. சம்பவத்தில் யாருக்கும் எவ்விதச் சேதமும் ஏற்படவில்லை என்றாலும், திறக்கப்பட்டு எட்டே மாதங்களில் சிலை சேதமடைந்ததைக் கவனிப்பாளர்கள் சுட்டினர்.

கடந்த மூன்று நாள்களாக அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில், சிலை உடைந்ததற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.

Comments