Offline
மெக்சிகோவில் போலீசாருடன் போதைப்பொருள் கும்பல் துப்பாக்கி சண்டை- 32 பேர் பலி
News
Published on 09/20/2024

போதைப்பொருள் கடத்தல் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்றாக தென் அமெரிக்காவின் மெக்சிகோ விளங்குகிறது. கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் இங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது.

சட்டவிரோதமாக நடைபெறும் இந்த போதைப்பொருள் கடத்தல் காரணமாக அந்த நாட்டின் அரசாங்கம் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருபவர்களை அந்த நாட்டின் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு மெக்சிகோ நாட்டின் சினாலாவோ மாகாணத்தில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டு வந்த ஜோகின் குஸ்மான் என்கிற எல் சாப்போ என்பவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னனாக செயல்பட்டு வந்த எல் சாப்போவின் கைதுக்கு பின்னர் அவனுடைய தளபதியான ‘மாயோ’ ஜாம்பாடா மற்றும் எல் சாப்போவின் மகன்கள் தலைமையில் இயங்கி வரும் ‘லாஸ் சபிடோஸ்’ கும்பல், போதைப்பொருள் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு மெக்சிகோவை ஆட்டி படைத்து வருகிறது.

இந்தநிலையில் மெக்சிகோவின் சினாலாவோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் இந்த இரு கும்பல்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதனை பயன்படுத்தி கும்பல்களின் கொட்டத்தை அடக்க போலீஸ் முடிவு செய்தது. இதனையடுத்து போலீசார் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு போதைப்பொருள் கும்பல்களை ஒழிக்க திட்டம் வகுக்கப்பட்டது.

அந்த வகையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நீடித்தது. இந்த சண்டையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்பட 30 பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகினர். 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சண்டையில் பாதுகாப்புப் படையை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். 115 துப்பாக்கிகள், பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

Comments