Offline
மாநாட்டில் பேசிய விஜய்; ஆட்சியில் பங்கு கேட்டு முதல்வருக்கு காங்கிரஸ் கடிதம்!
Published on 10/29/2024 11:00
News

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நேற்று (27-10-24) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், “மக்களோடு மக்களாகத் தொடர்ந்து நாம் களத்தில் தொடர்ந்து நிற்கப்போகிறோம். அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உண்மையாக, உயிராக, உறவாக நாம் உள்ளோம். அவர்களின் ஆசீர்வாதத்தாலும், அமோக ஆதரவாலும், நம்மைத் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தில் அமர  வைப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமான நம்பிக்கை உள்ளது. நூறு சதவீதம் இந்த நம்பிக்கை உள்ளது.

இருந்தாலும் அப்படி நிறைவாக இந்த நிலையை அடைந்தாலும், நம்மை நம்பி, நம் செயல்பாட்டை நம்பி நம்மோடு சில பேர் வரலாம் இல்லையா?. அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா?. அப்படி வருபவர்களையும் அரவணைக்கவேண்டும் இல்லையா?.  நமக்கு எப்போது நம்மை நம்பி வருபவரை அரவணைத்துத் தானே பழக்கம். அதனால் நம்மளை நம்பி களமாட வருபவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும். 2026ஆம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” எனப் பேசினார்.

இந்த நிலையில், ஆட்சியில் பங்கு வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் சரவணன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழக முதல்வரும் இந்தியா கூட்டனி கட்சி தமிழக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வணக்கம். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற அவர்களது கட்சி மாநாட்டில், 2026இல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று பேசியுள்ளார். ஆகவே, தாங்கள் தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும். தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள். எனவே, தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே, தமிழக மக்களின் எண்ணத்தை தாங்கள் நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

Comments