ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் கோவில், அருகிலுள்ள இடத்திற்கு மாறிச் செல்ல இணங்கியுள்ளது. கோலாலாம்பூர் மாநகர் மன்றம் DBKL-உடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின் அம்முடிவு எட்டப்பட்டதாக, ஆலயத்தின் செயலாளர் கார்த்திக் குணசீலன் செய்தியாளடரிடம் தெரிவித்துள்ளார்.
புதிய இடத்திற்கான கடிதத்தை கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தாபா ஆலய நிர்வாகத்திடம் இன்று ஒப்படைத்தார். அப்போது மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் உடன் இருந்தார்.
இந்த தீர்வு எட்டப்படுவதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், மாநகர் மன்றம் மேலும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஆலய நிர்வாகம் நன்றி தெரிவித்துக் கொண்டது.
அப்புதிய இடம், இப்போது ஆலயம் இருக்கும் இடத்திற்கு பக்கத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆலய இடமாற்றத்திற்கு பொருத்தமான இடமாக இருப்பதாக அவர் கூரினார்.
DBKL, ஆலய நிர்வாகம், நில உரிமையாளரான Jakel குழுமம் என முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் பலனளித்திருப்பதால், கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த சர்ச்சைகளும் முடிவுக்கு வந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
மேலும் புதிய இடத்தில் ஆலயம் கட்டி முடிக்கப்படும் வரையில் இந்த ஆலயம் இங்கேயே தொடர்ந்து செயல்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.