புக்கிட் மெர்தாஜாம்:
நேற்று சனிக்கிழமை (மே 10) சிம்பாங் அம்பாட்டில் உள்ள ஜாலான் பெர்மாடாங் திங்கியில் உள்ள ஒரு வர்ணப்பூச்சு சேமித்து வைத்திருந்த கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வெளிநாட்டு தொழிலாளர்கள் தீக்காயமடைந்தனர்.
பாதிக்கப்பட்ட மூன்று பேரும், 30 வயதுடைய நேபாள நாட்டவர்கள் என்றும், அவர்கள் குறித்த சேமிப்புக் கிடங்கில் பணியாற்றியவர்கள் என்றும், பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறினார்.
“மூன்று தொழிலாளர்களின் முதுகு மற்றும் கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டதாக கிடங்கிலிருந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு, பாதிக்கப்பட்டவர்கள் உடனே சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
“தீ விபத்தில் லாட் 1135 இல் அமைந்துள்ள இரண்டு கிடங்குகள் சம்பந்தப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் 10,000 சதுர அடி பரப்பளவு கொண்டவை” என்று அவர் சனிக்கிழமை இரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.