அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 12 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தடைசெய்யும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். தேசியப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
அதன்படி ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், காங்கோ, இக்குவட்டோரியல் கினி, எரித்ரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியாது. மேலும், புருண்டி, கியூபா, லாவோஸ், சியாரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுவேலா ஆகிய நாடுகளிலிருந்து செல்வோருக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் இருக்கும்.
பெரிய அளவில் பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுப்பவை, விசா பாதுகாப்புக்கு ஒத்துழைக்காதவை மற்றும் பயணிகளின் அடையாளங்களைச் சரிபார்க்கப் போதுமான ஆற்றல் இல்லாதவை, குற்றவாளிகளின் பின்னணி குறித்த தகவல்களை சரிவர சேகரித்துவைக்காதவை ஆகிய நாடுகள் ஆகக் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்நோக்கும் என்று டிரம்ப் விவரித்தார்.