தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதைத்தொடர்ந்து இவர் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் அடுத்ததாக, ரஜினி நடிப்பில் ‘கூலி’ திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படமானது ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதேசமயம் லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில் அமீர்கான் சூப்பர் ஹீரோ படம் ஒன்றில் நடிக்க போவதாக சொல்லப்பட்டது. அதாவது லோகேஷ் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த ‘இரும்புக்கை மாயாவி’ திரைப்படத்தில் தான் அமீர்கான் நடிக்க உள்ளார் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
இந்நிலையில் நடிகர் அமீர்கான் சமீபத்தில் நடந்த பேட்டியில், “நானும் லோகேஷ் கனகராஜும் ஒரு படத்தில் பணியாற்றவுள்ளோம். இது மிகப்பெரிய பட்ஜெட்டில் ஆக்ஷன் சூப்பர் ஹீரோ பாணி படமாக இருக்கும். கைதி 2 படத்திற்கு பிறகு அந்த படத்தை தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம். 2026ம் ஆண்டின் இறுதியில் இந்த படத்தை தொடங்கப் போகிறோம். 2027ல் இந்த படம் திரைக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.
அமீர் கான் குறிப்பிட்ட சூப்பர் ஹீரோ கதை நடிகர் சூர்யாவுக்கு லோகேஷ் கனகராஜ் சொன்ன, ‘இரும்பு கை மாயாவி’யாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.