சாலை விபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஷைன் டாம் சாக்கோ தனது குடும்பத்தோடு காரில் பெங்களூரு நோக்கி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பாறையூர் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த அவரது தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்த ஷைன் டாம் சாக்கோ, அவரது தாயார் மரியா கார்மல் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஷைன் டாம் சாக்கோ தமிழில் ‘குட் பேட் அக்லி’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.