மெக்சிகோவின் குவானா ஜுவாடோ மாகாணத்திலுள்ள இரபுவாடோ நகரில் புனித யோவானுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடந்த மத விழா பேரதிர்ச்சியில் முடிந்தது. சாலையில் நடனமாடி கொண்டாடிய மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு சிறுவன் மற்றும் இரு பெண்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.துப்பாக்கி சூட்டின்போது மக்கள் அலறி ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகின்றன. தாக்குதலுக்குப் பிறகு சம்பவ இடத்திலிருந்து தாக்குதலாளர்கள் தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த பயங்கர சம்பவம் குறித்து மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குவானா ஜுவாடோ மாகாணம் மெக்சிகோவின் மிக அதிக வன்முறை நடக்கும் பகுதிகளில் ஒன்றாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.