சுபாங்
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், ரஷ்ய அதிபர் புடினின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ள அதிகாரபூர்வ அரச உயர் மட்ட பயணத்திற்காக இன்று காலை ரஷ்யாவுக்குப் புறப்பட்டார்.
1967ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பின் மலேசியா-ரஷ்யா இடையே உள்ள உறவில் முதல் முறையாக ஒரு மலேசிய பேரரசர் ஒருவர் ரஷ்யாவுக்குச் செல்லும் வரலாற்றுச் செயலாக இந்தப் பயணம் அமைகிறது.
அவர் பயணிக்கும் சிறப்பு விமானம் சுமார் காலை 8.55 மணியளவில், இங்குள்ள மலேசிய ராயல் ஏர்ஃபோர்ஸ் (RMAF) தளத்திலிருந்து புறப்பட்டது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துணை பிரதமர் ஆகியோர் பேரரசரை வழியனுப்ப வருகை தந்தனர்.
அவர்களுடன் வெளியுறவு அமைச்சர், தகவல் தொடர்பு அமைச்சர், அரசு தலைமை செயலாளர், நாடாளு ளுமன்ற சபாநாயகர், ஆயுத படைத்தலைவர், ராயல் ஏர்போர்ஸ் தளபதி மற்றும் போலீஸ் தலைவர் ஆகியோரும் பங்கேற்றனர்.
புறப்படும் முன், ராயல் மலாய் ரெஜிமென்ட் முதல் படைவீரர்களால் கௌரவ அணிவகுப்பு அளிக்கப்பட்டது. அதன்பின் 21 துப்பாக்கி சூட்டும் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
பேரரசர் செவ்வாய்க்கிழமை மாஸ்கோவிற்கு வருகை தரவுள்ளதுடன், புதன்கிழமையில் க்ரெம்லினில் நடைபெறும் வரவேற்பு விழாவில் பங்கேற்று, புடின் உடன் அதிகாரப்பூர்வ சந்திப்பையும், பின்னர் நடைபெறும் இரவு சந்திப்பிலும் கலந்து கொள்கின்றார்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி, ரஷ்யாவின் ஐந்தாவது பெரிய நகரமான கசானுக்குப் பயணம் செய்து, டாடார்ஸ்தான் குடியரசின் தலைவர் ரஸ்தாம் மின்னிகானோவை சந்தித்து, வர்த்தகம், முதலீடு, ஹலால் தொழில் மற்றும் விவசாயத் தொழில்நுட்பத் துறைகளில் கூட்டுறவைப் பற்றி கலந்துரையாடவுள்ளார்.
2024ஆம் ஆண்டில், ரஷ்யா, மலேசியாவின் ஐரோப்பிய வர்த்தகக் கூட்டாளிகளில் ஒன்பதாவது இடத்தையும், உலகளவில் 28வது இடத்தையும் பிடித்துள்ளது. இருநாட்டுக்கிடையேயான மொத்த வர்த்தக மதிப்பு RM11.46 பில்லியன் (USD2.48 பில்லியன்) ஆக இருந்தது.
2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, இருநாட்டு வர்த்தகம் RM4.13 பில்லியன் (USD945.7 மில்லியன்) ஆக பதிவாகியுள்ளது.