ஷா ஆலம்,
ஜாலான் செத்தியா பிரிமா பகுதியில், 37 வயது ஆடவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற வழிப்பறி கொள்ளையனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் நேற்று இரவு 7.07 மணியளவில் செத்தியா ஆலத்தில் நடந்ததாக ஷா ஆலம் மாவட்ட காவல் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த நபர் தனது காரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆடவன் திடீரென அவரை அணுகி, கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றான். ஆனால் உடனடியாக பதிலடி கொடுத்த பாதிக்கப்பட்ட நபர், சங்கிலியை மீண்டும் பறித்து எடுத்தார்.
இதனால் தவறிய கொள்ளையன் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தான். பின்னர் தப்பிச் செல்ல முயன்ற அவரை அருகிலிருந்த பொதுமக்கள் விரைந்து மடக்கிப் பிடித்தனர்.
மோட்டார் சைக்கிளில் போலி எண்ணை பயன்படுத்தியிருப்பதும் தொடக்கக்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் தற்போது ஆகஸ்ட் 7 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்களுக்காக, விசாரணை அதிகாரியான சார்ஜன் முகமது ஹனாபி அப்துல் கனி (தொலைபேசி: 010-3728932) என்பவரை தொடர்புகொள்ளுமாறு போலீசார் கேட்டுள்ளனர்.
இந்த வழக்கு, மலேசியக் குற்றவியல் சட்டம் பிரிவு 393 (முயற்சி செய்யப்பட்ட வழிப்பறி) என்ற பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
மேலும், சம்பவத்தின் போது வழிப்பறி கொள்ளையன் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் இடையே நடந்த மோதலைப் பதிவு செய்த காணொளி, சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.