Offline
Menu
மலேசியாவின் ‘டத்தோ தாத்தா’ புஷ்பநாதன் லட்சுமணன் காலமானார்
By Administrator
Published on 08/09/2025 09:00
News

மலேசியாவின் வயது முதிர்ந்த விரைவு ஓட்டப்போட்டியாளராகவும், “டத்தோ தாத்தா” என அழைக்கப்பட்ட புஷ்பநாதன் லட்சுமணன் (95) காலமானார். அவரது மறைவு, மைதானத்தில் மட்டுமல்ல, நம் மனதிலும் நீங்காத ஓட்டங்களை விட்டுச் சென்றுள்ளது. புதன்கிழமை இரவு, வீட்டில் விழுந்த பிறகு, ஈப்போ  மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். வயதைக் கடந்தும், ஆண்டுதோறும் தனது  ஓட்டங்களால் வயது என்பது எண்ணிக்கை மட்டுமே என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்தவர்.

2018இல் மலேசியா ஓப்பன் மாஸ்டர்ஸ் போட்டியில் முதன்முறையாக கலந்து கொண்ட புஷ்பநாதன், 400மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றதிலிருந்து, அவரின் இரண்டாவது வாழ்க்கை ஆரம்பமானது. 93ஆவது வயதில், அவர் 100மீட்டர் ஓட்டத்தை 32.4 விநாடிகளில் முடித்தார் — 75 வயதுக்கும் மேற்பட்டோருக்கான பிரிவில் போட்டியிட்ட ஒரே 90 வயதான போட்டியாளர். 2023இல், மலேசியா மாஸ்டர்ஸ் அனைத்துலக போட்டியில், 100மீ. ஓட்டத்தில் 28.74 விநாடிகளில் முடித்து தங்கம் வென்றார். 200மீ. ஓட்டத்திலும் 88.8 விநாடிகளில் ஓடி முதலிடம் பிடித்தார். “என் கடைசி மூச்சுவரை ஓடுவேன்,” என்பது அவரது வாழ்க்கையின் வாசகமாக இருந்தது.

ஈப்போவில் உள்ள SM ராஜா சுலான் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய புஷ்பநாதன், ஓட்டப்போட்டியை  வயதான காலத்தில் தொடங்கியவர். பேராக் மாஸ்டர்ஸ் அணிக்காக போட்டியிட்ட அவர், பதக்கங்களை மட்டுமல்ல, மக்களின் மனங்களையும் வென்றார். இளைஞர்களையே புகழும் இந்த உலகில், புஷ்பநாதன் ஒரு விதிவிலக்கான கதையை சொன்னார் என்று ஆசியா மாஸ்டர்ஸ் அத்த்லெடிக்ஸ் சங்கத்தின் மரியாதைப் பிரதிநிதி வி. புலேந்திரன் கூறினார்.

போட்டியாளராக மட்டும் அல்லாது, புஷ்பநாதன் இப்போவில் சுவிஃட்ஸ் அத்த்லெடிக்ஸ் கிளப்பை தொடங்கி, மலேசிய விளையாட்டு வீரர்கள் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பு செய்தார். குறிப்பாக, மலேசியாவின் முதல் “ஸ்போர்ட்ஸ்வுமன் ஆஃப் தி இயர்” விருது பெற்ற ராஜமணியின் வளர்ச்சிக்குத் துணைநின்றார். 1998 காமன்வெல்த் விளையாட்டுகள் உட்பட பல தேசிய, அனைத்துலக போட்டிகளில் அறிக்கை அதிகாரியாக ஆறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். அவரின் மனைவி மங்களேஸ்வரி, மகள் சாந்தி தேவி, பேரக்குழந்தைகள் ஷாலினி, விக்ரம் ஆகியோர் அவரது பெருமை கூறும் முதல் விருதாளர்கள். வயது என்பது அவருக்கு ஒரு தடையாக இல்லை. அது ஓட்டப்பாதையின் இன்னொரு வழியாக மட்டுமே இருந்தது என பேரனாகிய விக்ரம் கூறினார்.

Comments