புத்ராஜெயா,
நாட்டின் டிஜிட்டல் மாற்ற திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் போது, ‘AI Productivity Paradox’ எனப்படும் அபாயத்தை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வலியுறுத்தினார்.
அவர் விளக்குகையில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கு மிகப்பெரிய முதலீடுகள் செய்யப்பட்டாலும், அவை எப்போதும் உற்பத்தித் திறனை உயர்த்தும் என உறுதி தராது என்றார். இதுவே ‘AI Productivity Paradox’ என்று அழைக்கப்படும் நிலைமை எனவும் கூறினார்.
அதே நேரத்தில், ‘Trough of Disillusionment’ எனப்படும் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு கட்டத்தை நாட்டில் தவிர்க்க வேண்டும் என்றார். அந்த கட்டத்தில், மிகுந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால், புதிய தொழில்நுட்பத்தில் மக்கள் மற்றும் அமைப்புகளின் நம்பிக்கை குறையும் அபாயம் உள்ளது என்று அவர் எடுத்துக்காட்டினார்.
இதனால், டிஜிட்டல் அமைச்சகம், தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் அனைத்து துறைகளும் தரவு மேலாண்மை, IT ஒருங்கிணைப்பு சவால்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மதிப்பீட்டு நடைமுறைகள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
புத்ராஜெயாவில் நடைபெற்ற பிரதமருடன் மாதாந்திர சந்திப்பு நிகழ்வில் அவர் இந்த உரையை வழங்கினார். இந்நிகழ்வில் துணைப் பிரதமரும் எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் மாற்றம் அமைச்சருமான டத்தோ ஸ்ரீ படில்லா யூசுப் மற்றும் சட்டம், நிறுவன சீர்திருத்த அமைச்சர் டத்தோ’ ஸ்ரீ அசலினா ஒத்மான் சயீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.