கொழும்பு:
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க அரசாங்க நிதியை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டார் என்று இலங்கைக் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்தார்.
அதிகாரியின் தகவல்படி, 2023 செப்டம்பரில் முன்னாள் அதிபராக இருந்தபோது விக்ரமசிங்க லண்டன் பயணம் மேற்கொண்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது மனைவி கலந்து கொண்ட ஒரு விழாவிற்காக பிரிட்டிஷ் பல்கலைக்கழகமொன்றுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வளங்களை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், விக்ரமசிங்கை கொழும்புத் துறைமுக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.
2023 ஆம் ஆண்டு ஹவானாவில் நடைபெற்ற G77 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிறகு, விக்ரமசிங்க லண்டனுக்கு பறந்தார். அங்கு, உல்வர்ஹேம்ப்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் அவர் மற்றும் அவரது மனைவி மைத்ரீ கலந்துகொண்டனர்.
தனது மனைவியின் பயணச் செலவை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டதாகவும், எந்தவித அரசாங்க நிதியும் பயன்படுத்தப்படவில்லை எனவும் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், காவல்துறையின் குற்றப் புலனாய்வு துறை (CID), இந்த தனிப்பட்ட பயணத்திற்கும் பாதுகாவலர்களின் பயணச் செலவிற்கும் அரசாங்க நிதி பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பெரிய அளவிலான மக்கள் எழுச்சியின்போது, அந்நாட்டு அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகினார். அதையடுத்து, அதே ஆண்டு ஜூலையில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்றார்.
அந்த நேரத்தில் இலங்கை வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த நிலையில், பொருளாதாரத்தை நிலைப்படுத்தியதற்காக விக்ரமசிங்க பாராட்டப்பட்டார். ஆனால், 2024 செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.