ரோன்95 இலக்கு மானியத் திட்டம் பல கட்டண வழிமுறைகளைப் பயன்படுத்தும், மேலும் இது அடையாள அட்டையை மட்டுமே சார்ந்திருக்காது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி கூறினார்.
மானிய விலையில் பெட்ரோல் வாங்கும் போது பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்வது குறித்து கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் செயலிகளான பெட்ரோனாஸின் செடெல் மற்றும் ஷெல்லின் ஷெல் ஆப் போன்ற பிற முறைகள் மூலம் மானியத்தை எளிதாகவும் விரைவாகவும் அணுக முடியும் என்று அவர் கூறினார்.
பெட்ரோல் நிலையங்களில் உள்ள உட்புற அல்லது வெளிப்புற கட்டண முனையங்களைப் பயன்படுத்தி அவர்கள் மானிய விலையில் எரிபொருளை வாங்கலாம். தகுதி மை கார்டுடன் இணைக்கப்படும் என்றாலும், உண்மையான கொள்முதல் ஒரு கட்டண முறையை மட்டும் சார்ந்தது அல்ல என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி நூர் தலைமையில் நடைபெற்ற ஒரு நாள் சபா மாணவர்கள் மாநாட்டில் ஆர்மிசான் கலந்து கொண்டார். நிதி அமைச்சகத்தால் விரைவில் அறிவிக்கப்படும் இலக்கு எரிபொருள் மானியத் திட்டத்தை சீராக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அரசாங்கம் முழுமையாகத் தயாராகி வருவதாக ஆர்மிசான் வலியுறுத்தினார்.
செயல்முறை சீராக நடப்பதை நாங்கள் உறுதி செய்வோம், பொதுமக்களுக்கு சுமையாக இருக்காது, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கும் என்ற கவலைகளைத் தவிர்ப்போம் என்று அவர் மேலும் கூறினார்.