கோலாலம்பூர் :
இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 11 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமாகக் கூறப்படும் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீசென் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை தெரிவித்ததாவது:
“‘கோல்ட்ரிப்’ மருந்தின் தயாரிப்பு உரிமத்தை ரத்து செய்வதற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், 1 முதல் 7 வயது வரை உள்ள ஆறு குழந்தைகள் 15 நாள்களுக்குள் உயிரிழந்தன. மரணக்காரணமாக சிறுநீரக செயலிழப்பு என குறிப்பிடப்பட்டது. விசாரணையில், அந்த குழந்தைகள் ‘கோல்ட்ரிப்’ மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட ‘நெக்ஸ்ட்ரோ டி.எஸ்.’ என்ற இருமல் மருந்துகளை உட்கொண்டது தெரியவந்தது.
அந்தக் குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் ‘டை எத்திலீன் கிளைசால்’ எனப்படும் ஆபத்தான வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இது சாயம் மற்றும் மை போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனமாகும். அந்த வேதிப்பொருள் சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து, மத்திய அரசு மற்றும் மத்தியப் பிரதேச அரசு இணைந்து பல்துறை விசாரணைக் குழுவை அமைத்துள்ளன. அதேசமயம், மத்தியப் பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு காஞ்சிபுரம் ஸ்ரீசென் பார்மாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைச் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டு அமைப்பும் அந்த நிறுவனத்தில் கடந்த இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்டது. அப்போது, ‘கோல்ட்ரிப்’ உட்பட 5 மருந்துகளை எடுத்துச் சென்று பரிசோதித்தனர். இதில் மற்ற மருந்துகளில் பாதிப்பு இல்லையெனவும், ஆனால் ‘கோல்ட்ரிப்’ மருந்தில் டை எத்திலீன் கிளைசால் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் உறுதி செய்ய மத்திய அரசின் ஆய்வுக்கூடத்திற்கும் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், மறு உத்தரவு வரும் வரை ‘கோல்ட்ரிப்’ மருந்தின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் உயிரிழப்பு சம்பவத்தையடுத்து, மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அதில், “2 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளை பரிந்துரைக்கக் கூடாது,”என வலியுறுத்தப்பட்டுள்ளது