கொழும்பு:
இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் மீது இன்று செவ்வாய்க்கிழமை பறவை மோதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவ்விமானத்தில் 158 பயணிகள் பயணம் செய்தனர். அது சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கிய பின்னரே பறவை மோதியிருப்பது கண்டறியப்பட்டது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவன பொறியாளர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விமானத்தை விரிவாக சோதனை செய்தனர். விமானம் மீண்டும் கொழும்பு திரும்பவிருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அந்தப் பயணத்திற்காக இருந்த 137 பயணிகள் பின்னர் வேறு ஒரு விமானத்தில் கொழும்பு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதற்கு முன்பு, கடந்த சனிக்கிழமை (அக்.4) பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரிலிருந்து இங்கிலாந்தின் பர்மிங்ஹாமுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டது. தரையிறங்கும் தருணத்தில் அவசரகால இயந்திரம் தானாக செயல்பட்டதால் பரபரப்பு நிலவியது. எனினும், விமானிகள் அதனை பாதுகாப்பாக தரையிறக்கினர்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.