மெக்சிகோ சிட்டி,வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்நாட்டை அருகே பசுபிக் கடலில் புயல் உருவாகியுள்ளது. ரேமண்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் மெக்சிகோவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்நாட்டின் 32 மாகாணங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டின் வெரகுரூஸ், குவாரடிரோ, ஹிடல்கோ, சன் லுயிஸ் பொடொசி ஆகிய நகரங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்நிலையில், கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக மெக்சிகோவில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. ரேமண்ட் நாளை கரையை கடக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.