கோலாலம்பூர்:
சிங்கப்பூரில் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள மலேசியர்கள், அக்டோபர் 16ஆம் தேதி முதல் ‘பூடி95’ (Budi95) எரிபொருள் மானியத்திற்காக விண்ணப்பிக்கலாம் என்று போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் அறிவித்துள்ளார்.
இந்த மானியத் திட்டத்திற்காக சாலைப் போக்குவரத்துத் துறையின் கீழ் ஒரு தனி இணையதளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களும் மறுஆய்வு மற்றும் தகுதி மதிப்பீட்டிற்காக நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும்,” என லோக் சியூ ஃபூக் புதன்கிழமை (அக்டோபர் 15) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
விண்ணப்பங்கள் மூன்று முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்:
விண்ணப்பதாரர் மலேசியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
செல்லுபடியாகும் சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சிங்கப்பூரில் வேலை அனுமதித் தகுதி நிலை மதிப்பாய்வு செய்யப்படும்.
சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசிய ஓட்டுநர்களுக்கு — குறிப்பாக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு — இத்திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என அமைச்சர் லோக் தெரிவித்தார்.
விண்ணப்பம் செய்ய: www.Budi95lesenSG.jpj.gov.my
விண்ணப்பித்த 14 நாட்களுக்குப் பிறகு தாங்கள் மானியத்திற்கு தகுதியானவர்களா என்பதை www.Budi95.gov.my இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இருப்பினும், மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே ‘புடி95’ எரிபொருள் மானியம் வழங்கப்படும் என அமைச்சர் லோக் வலியுறுத்தினார்.