Offline
Menu
அயோத்தியில் 26 லட்சம் தீபம் ஏற்றி உலக சாதனை: யோகி ஆதித்யநாத் பெருமிதம்
By Administrator
Published on 10/22/2025 00:55
News

லக்னோ:நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட்டப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை, மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து மகா தீபத்திருவிழாவை இன்று நடத்தியது. அப்போது வாணவேடிக்கையும் நடத்தப்பட்டது.

சரயு ஆற்றின் கரையில் 26,17,215 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது.

இதனை பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து, உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கண்டுகளித்தார். இதேபோல், திரளான மக்கள் கலந்து கொண்டு மகா ஆரத்தி எடுத்தனர். அப்போது தீபங்களை ஒன்றாக சுழற்றினர். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் பெற்றார்.

அப்போது பேசிய யோகி ஆதித்யநாத், உலக அரங்கில் உத்தர பிரதேசத்திற்கான புதுப்பிக்கப்பட்ட அடையாளம் ஒன்றை வடிவமைப்பதில் இந்த திருவிழா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்ரீராம ஜென்ம பூமியில் ராமர் முன்பு முதல் விளக்கை ஏற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடந்த கால அரசில் அயோத்தியின் ஆன்மீக முக்கியத்துவம் அலட்சியப்படுத்தப்பட்டது. ராம பக்தர்களின் உணர்வுகள் அவமதிக்கப்பட்டன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு காரணமே கடவுள் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை தான் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Comments