லண்டன்,இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் இந்திய வம்சாவளி சீக்கிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்நிலையில், இங்கிலாந்தில் மேலும் ஒரு இந்திய இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த இளம்பெண் இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த சனிக்கிழமை மாலை வால்சால் நகரில் உள்ள பார்க் ஹால் பூங்காவில் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற நபர் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் வைத்து அவரை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இந்திய இளம்பெண் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார், பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார், தலைமறைவாக உள்ள நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.