சென்னை:
இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி, ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்திற்கும் தமக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையெனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாலாஜி, நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் பாகத்தை இயக்கியிருந்தார். தற்போது அவர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் கருப்பு திரைப்படம் உருவாகி வருகிறது. சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தீபாவளியை முன்னிட்டு வெளியான கருப்பு படத்தின் “God Mode” பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது படத்தின் 80% பணிகள் முடிந்துள்ளன. படத்தின் வெற்றிக்காக திருச்செந்தூர் முருகன் கோவிலில் வழிபாடு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாலாஜி, “எனக்கு தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதற்காக நன்றி சொல்லத்தான் வந்தேன். கருப்பு எதிர்பார்த்தபடி சிறப்பாக உருவாகி வருகிறது. விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிப்போம்,” என்றார்.
இதற்கிடையில், சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா மீண்டும் நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “அந்தப் படத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் தொடங்கும் முன்பே என்னிடம் விவரம் தெரிவித்தனர். எனவே எந்தப் பிரச்சினையும் இல்லை; அவர்களுக்கு என் வாழ்த்துகள்,” என்று தெரிவித்தார்.