2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் ‘காந்தாரா’. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான ‘காந்தாரா சாப்டர்1’ கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.
பலதரப்பு மக்களால் ரசிக்கப்படும் ‘காந்தாரா சாப்டர்1’ வெளியான 20 நாட்களில் உலக அளவில் ரூ.803 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்தது.
இதைதொடர்ந்து,’காந்தாரா சாப்டர்1′ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படத்தின் ஆங்கில வெர்ஷன் வருகிற 31-ந்தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.
கன்னட வெர்ஷனின் நீளம் 169 நிமிடங்களாக உள்ள நிலையில், ஆங்கில வெர்ஷன் சற்று குறைவாக 134 நிமிடங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஆங்கிலத்தில் டப்பிங் செய்து திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ‘காந்தாரா சாப்டர்1’ பெறுகிறது.
இந்நிலையில்,’காந்தாரா சாப்டர் 1′ திரைப்படம் ஒடிடியில் வெளியாகும் தேதி குறித்து படக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த் நடிப்பில் வெளியாகி உலகெங்கும் வசூல் வேட்டை செய்து வரும் ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் அக்.31ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகிறது.