ஈப்போ,
இம்மாதம் 23ஆம் தேதி பேராக் சுகாதார இலாகா ஈப்போவில் உள்ள 3 பகுதிகளில் மேற்கொண்ட அதிரடி அமலாக்க சோதனையில் முறைப்படி பதிவு செய்யப்படாத சுமார் 300 வகை சுகாதார தயாரிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்களின் மொத்த மதிப்பு 1.5 மில்லியன் ரிங்கிட் வரை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதிலும் இந்த பொருட்களுள் அழகு சாதன – ஒப்பனை பொருட்களும் அடங்கும்.
சட்ட விரோதமாக இந்த பொருட்கள் தயாரிக்கபட்டு சந்தையில் விற்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக பொது மக்கள் வழங்கிய புகார்கள், அமலாக்க தரப்பினர் மேற்கொண்ட கண்காணிப்பு பணிகள் வாயிலாக பெர்சாம், மேரு ராயா, ஜெலாபாங் ஆகிய பகுதிகளின் மாநில சுகாதார இலாகாவின் மருந்தக அமலாக்க கிளைகள் இந்த சோதனையை நடத்தினர்.
அதில் அங்கீகரிக்கப்படாத பாரம்பரிய மருந்து வகைகள், பதிவு செய்யப்படாத வெளிநாட்டு மருந்து வகைகள், முறையான உற்பத்தி தகவல் தொடர்பு
இல்லாத அழகு சாதன – ஒப்பனை பொருட்கள், அவற்றை விற்பனை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட 3 சாதனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக பேராக் சுகாதார இலாகா தெரிவித்துள்ளது.
இத்தகைய பொருட்கள் விற்பனை செய்யப்படுவது 1984 போதைப் பொருள் – அழகு சாதன – ஒப்பனை பொருட்கள் கட்டுப்பாடு சட்டம் விதிமுறை 7(1)(ஏ), 18A(1)(அ) ஆகியவற்றுக்கு எதிரான குற்றமாகும். அதன் அடிப்படையில் முதல் குற்றத்திற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு 25,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது அதிகப்பட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
மேலும் அடுத்த குற்றத்திற்கு 50,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது அதிகப்பட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். அதே சமயம் இந்த சட்ட விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு முதல் குற்றதிற்கால 50,000 ரிங்கிட் அபராதமும் அடித்த குற்றத்திற்கு 100,000 ரிங்கிட் வரை அபராயமும் விதிக்கப்படலாம் என்று இலாகா தமதறிக்கையில் விவரித்த்துள்ளது.