கோலாலம்பூர் :
சிங்கப்பூரிலுள்ளவர்களை குறிவைத்து, குறைந்தது S$41 மில்லியன் (RM145 மில்லியன்) ஏமாற்றிய அரசாங்க அதிகாரி ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 34 சந்தேக நபர்களில் ஏழு மலேசியர்களும் அடங்குவர் என்று சிங்கை போலீஸ் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் கம்போடியாவின் புனோம் பென்னில் உள்ள ஒரு மோசடி வளாகத்தில் இருந்து செயல்படும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவின் உறுப்பினர்கள் என்று நம்பப்படுகிறது என்று SPF இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த கும்பலின் உறுப்பினர்கள் என நம்பப்படும் 27 சிங்கப்பூரர்கள், ஏழு மலேசியர்கள் ஆகியோருக்கு எதிராக சிங்கப்பூர் பீடியாணை பிறப்பித்துள்ளது.
சந்தேகத்துக்குரிய 34 பேரும் தற்போது சிங்கப்பூருக்கு வெளியே இருப்பதாக சிங்கப்பூர் காவல்துறை நேற்று புதன்கிழமை (அக்டோபர் 29) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மோசடிக் கும்பலுடன் தொடர்புள்ளவர்கள் என்று செப்டம்பர் மாதம் குற்றம் சாட்டப்பட்ட 15 பேருடன் அந்தச் சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூர் மக்களைக் குறிவைத்து அரசாங்க அதிகாரிகள்போல ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட குற்றக் கும்பலுக்கு எதிராக செப்டம்பர் 9ஆம் தேதி கம்போடியக் காவல்துறையுடன் இணைந்து சிங்கப்பூர் காவல்துறை அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது.
கம்போடியாவில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, சந்தேகத்துக்குரிய 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 12 சிங்கப்பூரர்கள், இரு மலேசியர்கள், ஒரு பிலிப்பீன்ஸ் நாட்டவர் ஆகியோர் அடங்குவர்.
அவர்கள் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டு, உள்நாட்டு தொடர்புடைய குற்றவியல் கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததற்காக செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் குற்றம் சாட்டப்பட்டனர்.
மேல் விசாரணைக்குப் பிறகு, மேலும் 27 சிங்கப்பூரர்களையும் ஏழு மலேசியர்களையும் திட்டமிட்ட குற்றச் செயல்களைப் புரியும் குழுவின் உறுப்பினர்களாகக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.