புதுடெல்லி:
டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தோக்கியோவுக்கு புறப்படவிருந்த ஏர்இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்படும் தருவாயில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
நவம்பர் 24 அன்று இரவு 8.50 மணிக்கு புறப்படவிருந்த ஏஐ 358 எனும் போயிங் 787-8 ரக விமானத்தில், புறப்படுவதற்கு முன்னர் தொழில்நுட்ப பிரச்சனை இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. பயணிகள் மற்றும் குழுவினரின் பாதுகாப்பை முன்னிட்டு, அந்த விமானச் சேவையை உடனடியாக ரத்து செய்ய ஏர்இந்தியா முடிவு செய்தது.
ஏர்இந்தியாவின் ஒரு உயரதிகாரி இதுகுறித்து தெரிவித்ததாவது:
“இந்த வகையான சந்தேகங்கள் எழும்போது விமானத்தை ரத்து செய்வது வழக்கமான பாதுகாப்பு நடைமுறையே. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம், ஆனால் பாதுகாப்பு எங்களின் முக்கிய முன்னுரிமை.”
ரத்து செய்யப்பட்ட இந்த சேவையால் பாதிக்கப்பட்ட பயணிகளில் சிலருக்கு மாற்று விமானங்களில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மீதமுள்ள பயணிகளுக்காக தங்கும் வசதிகள் ஏர்இந்தியா தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டன.