மலாக்கா:
மலேசியாவை கடந்த இரவு முதல் தாக்கிய ‘சென்யார்’ சூறாவளியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 49 மரங்கள் சாய்ந்தன, மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
நவம்பர் 27 நள்ளிரவு முதல் சூறாவளி மலேசியாவின் பல மாநிலங்களை கடக்கத் தொடங்கியது. இதன் தாக்கமாக பல இடங்களில் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் பலத்த காற்று பதிவாகின. சில கட்டிடங்களும் பாதிக்கப்பட்டன.
வெள்ளிக்கிழமை அதிகாலை ஜாலான் சிலேந்தர்–மச்சாப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர், சூறாவளியால் சாய்ந்த மரத்தில் மோதி உயிரிழந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம் போர்ட்டிக்சன் பகுதியில் உள்ள பெட்ரோன் டீசல் படகு முனையத்தில் கட்டுமானப் பகுதி ஒன்று சரிந்ததாக மலேசிய தீ மற்றும் மீட்புப் பணித் துறை உறுதிப்படுத்தியது.
இந்த சூறாவளியில் நெகிரி செம்பிலான் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக உள்ளது. அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது, அத்தோடு இரண்டு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
மலாக்காவில் எட்டு மரங்கள், சிலாங்கூரில் ஐந்து மரங்கள் சாய்ந்தன. தலைநகர் கோலாலம்பூரில் பெரிய சேதங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ மற்றும் மீட்புப் பணித் துறை கூறியதாவது: “சென்யார் சூறாவளி தற்போது வலுவிழந்துள்ளது. இருந்தாலும், மழை தொடர்ந்து பெய்துவருவதால் நிலச்சரிவு மற்றும் மரம் விழும் அபாயம் நீடிக்கிறது. அனைத்து பிரிவுகளும் விழிப்புநிலையில் உள்ளன.”
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.