கோலாலம்பூர்:
பத்து மலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை அரிவாளால் தாக்கிப் படுகாயப்படுத்திய விவகாரம் தொடர்பாக எட்டு நபர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி காலை 10.35 மணியளவில் நிகழ்ந்துள்ளது என்றும், அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அந்த இளைஞர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார் என்றும், கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் நூர் அரிஃபின் முகமட் நாசிர் கூறினார்.
செலாயாங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த மருத்துவ அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. அரிவாளால் வெட்டப்பட்ட அந்த இளைஞர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகார் கிடைத்த அதே நாளில், கோம்பாக் மாவட்டக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், சிலாங்கூர் மாநிலக் காவல்துறையின் D7 பிரிவினரும் இணைந்து அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்:
முதல் கட்டமாக நான்கு சந்தேக நபர்கள் டிசம்பர் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் டிசம்பர் 21 வரை 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர் நடவடிக்கையின் மூலம் மேலும் நான்கு உள்ளூர் நபர்கள் டிசம்பர் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட எட்டு நபர்களும் 21 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் தற்போது டிசம்பர் 22 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு, ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்திப் படுகாயத்தை விளைவித்ததற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326-இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.