கோலாலம்பூர்:
சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என நிரூபிக்கப்பட்டதையடுத்து, பாடகர் Namewee (இயற்பெயர்: வீ மெங் சீ) போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் இருந்து இன்று முழுமையாக விடுவிக்கப்பட்டார்.
குறித்த பாடகரின் சிறுநீர் பரிசோதனை முடிவுகள் (Pathology Report) ‘எதிர்மறை’ என வந்துள்ளதால், அவர் மீது குற்றச்சாட்டைத் தொடர ஆதாரங்கள் இல்லை என அரசுத் தரப்பு தெரிவித்தது.
இந்நிலையில் மாஜிஸ்ட்ரேட் எஸ். அருண்ஜோதி, Namewee-ஐ வழக்கிலிருந்து விடுவித்து, அவர் கட்டியிருந்த 2,000 ரிங்கிட் பிணைப் பணத்தைத் திருப்பித் தரவும் உத்தரவிட்டார்.
இருப்பினும் பாடகர் Namewee ஒரு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், அவர் மீதான சட்டச் சிக்கல்கள் இன்னும் முழுமையாகத் தீரவில்லை. கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் 5.12 கிராம் எக்ஸ்டசி (Ecstasy) போதைப்பொருள் வைத்திருந்ததாக அவர் மீது மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிற்கான விசாரணை வரும் ஜனவரி 19, 2026 அன்று நடைபெறவுள்ளது.
அடுத்து கடந்த அக்டோபரில் தைவானைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்ஸர் ஐரிஸ் ஹே (Iris Hsieh) என்பவர் ஹோட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் Namewee-யிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது அவர் இந்த விசாரணையில் போலீஸ் பிணையில் (Police Bail) விடுவிக்கப்பட்டுள்ளார்.