துவாஸ் சோதனைச்சாவடியூடாக தளபாடங்கள் மற்றும் உபகரணப் பெட்டிகளில் மறைத்து சிகரெட் கடத்தல் – 3 மலேசியர்கள் கைது!
கோலாலம்பூர்:
சிங்கப்பூரின் துவாஸ் (Tuas) சோதனைச்சாவடி வழியாக வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற மூன்று மலேசியர்களைச் சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி ஆணைய (ICA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி நிகழ்ந்த இந்த கடத்தல் முயற்சிகள் குறித்து ICA தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
முதல் சம்பவம்: மலேசியாவிலிருந்து வந்த ஒரு சரக்கு லோரியைச் சோதனையிட்டபோது, அதில் ‘உபகரணப் பெட்டிகள் மற்றும் சேமிப்பு இழுப்பறைகள்’ (Tool boxes and drawer storage) இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவற்றைச் சோதித்ததில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,000-க்கும் மேற்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட் கார்ட்டூன்கள் (Cartons) கண்டுபிடிக்கப்பட்டன.
இரண்டாவது சம்பவம்: மற்றொரு சோதனையில், ‘தளபாடங்கள்’ (Furniture) எனக் கூறி கொண்டுவரப்பட்ட சரக்குகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,500 சிகரெட் கார்ட்டூன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக 27 முதல் 33 வயதுக்குட்பட்ட மூன்று மலேசிய ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் கார்ட்டூன்கள் மேலதிக விசாரணைக்காகச் சிங்கப்பூர் சுங்கத் துறையிடம் (Singapore Customs) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரின் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டவிரோத கடத்தல்களைத் தடுக்கவும் தீவிர சோதனைகள் தொடரும் என ICA அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.