கோலாலம்பூர்:
2026-ஆம் ஆண்டுக்கான பள்ளி கல்வித் தவணையில் மாணவர்களின் சீருடையில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று கல்வி இயக்குநர் டாக்டர் முகமட் அசாம் அமாட் உறுதிப்படுத்தியுள்ளார்.
சீருடைகளைத் தரப்படுத்துவது குறித்த வதந்திகளால் பெற்றோர்களிடையே ஏற்பட்டிருந்த குழப்பத்திற்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஆண்டு பள்ளி அமர்வில் தற்போது நடைமுறையில் உள்ள பள்ளி சீருடை விதிகளே தொடரும் என்றும், பெற்றோர்கள் புதிய வகை சீருடைகளை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் சொன்னார்.
சீருடைகளைத் தரப்படுத்தும் (Standardisation) திட்டம் இன்னும் ஆரம்பக்கட்ட ஆய்வு நிலையிலேயே உள்ளது. இது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், சீருடை மாற்றம் தொடர்பான அனைத்து சாதக பாதகங்களையும் பரிசீலித்த பிறகு, ஒருவேளை மாற்றம் தேவைப்பட்டால் அது 2027-ஆம் ஆண்டு அமர்வில் மட்டுமே அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று கூறினார்.
“எந்தவொரு புதிய கொள்கையையும் அறிமுகப்படுத்தும் முன், அது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது ஏற்படுத்தும் பொருளாதாரத் தாக்கத்தை நாங்கள் கருத்தில் கொள்வோம். குறிப்பாகப் பெற்றோரின் நிதிநிலை மற்றும் மாணவர்களின் நல்வாழ்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார் அவர்.