ஜார்ஜ் டவுன்:
பினாங்கு வடகிழக்கு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், சுமார் 2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களைப் பினாங்கு மாநிலப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மதியம் 1 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில் 19 முதல் 40 வயதுடைய மூன்று உள்ளூர் ஆண்கள் மற்றும் ஒரு வெளிநாட்டுப் பெண் கைது செய்யப்பட்டனர் என்று, பினாங்கு மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதலில் ‘ரன்ணர்களாக’ (Runners) செயல்பட்ட ஒரு உள்ளூர் ஆடவரையும் வெளிநாட்டுப் பெண்ணையும் போலீசார் ஜார்ஜ் டவுன் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருட்களைப் பதுக்கி வைக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு வாகனம் கண்டறியப்பட்டது.
அதிலிருந்து, 12.15 கிலோ எடையுள்ள MDMA போதைப்பொருள் தூள், 51.4 கிராம் கெட்டமின் (Ketamine), 30 எக்ஸ்டசி (Ecstasy) மாத்திரைகள், 10 எரிமின்-5 (Erimin 5) மாத்திரைகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த போதைப்பொருட்கள் சுமார் 50,000 பயனர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்ததாகக் காவல்துறை மதிப்பிட்டுள்ளது.
மேலும் இந்தக் கும்பல் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பினாங்கில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளது என்றும், கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது (Amphetamine, Methamphetamine & Ketamine) உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே குற்றப் பின்னணிகளும் உள்ளன என்றும் அவர் கூறினார்.
இவர்கள் அனைவரும் ஜனவரி 8-ஆம் தேதி வரை 6 நாட்கள் போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர். 1952-ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் கீழ் விசாரணை நடைபெறுகிறது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் காவல்துறையின் நுணுக்கமான புலனாய்வுத் திறனாலேயே இந்த வெற்றி சாத்தியமானது என்று டத்தோ அசிஸி பாராட்டு தெரிவித்துள்ளார்.