மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று ஜெனீவாவில் தொடங்குகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரடியாகக் கலந்துகொள்ளவில்லை என்றாலும், "மறைமுகமாக" இதில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளார். ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஏற்கனவே ஜெனீவா வந்தடைந்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அமெரிக்கா தனது இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியுள்ளதால் அங்கு போர் பதற்றம் நிலவுகிறது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் அமெரிக்க ராணுவம் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சியைத் தொடங்கி அழுத்தத்தை அதிகரித்துள்ளது.