மலேசியாவில் நீடித்து வரும் கடும் வெப்ப அலையினால் இதுவரை 15 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துரதிர்ஷ்டவசமாக சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 24 வரையிலான காலகட்டத்தில், வெப்பம் தொடர்பான பாதிப்புகள் குறித்துச் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மொத்தம் 15 பேர் வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் கடும் உடல் சோர்விற்கும் (Heat Exhaustion), மூவர் தீவிர வெப்பத்தாக்கத்திற்கும் (Heatstroke) ஆளாகியுள்ளனர்.
வெப்பத்தாக்கத்திற்கு உள்ளானவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்தச் சிறுவர் எதிர்பாராதவிதமாக வாகனத்திற்குள் சிக்கிக்கொண்டதை பெற்றோர் கவனிக்கத் தவறியதே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என அமைச்சு வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த சிறுவரைத் தவிர, பாதிக்கப்பட்ட மற்ற அனைவரும் சிகிச்சைக்குப் பின் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
பள்ளி விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கல்வி அமைச்சு (KPM) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது:
வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எளிமையான விளையாட்டு ஆடைகளை (Casual/Sports attire) அணிந்து வரச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் உடனடியாக ஒத்திவைக்க வேண்டும்.
மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் அருந்துவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் தடையின்றி குடிநீர் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.
சிறார், முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகள் மற்றும் திறந்தவெளியில் வேலை செய்பவர்களுக்கு வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் எனச் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. லேசான தலைச்சுற்றல் முதல் உயிருக்கே ஆபத்தான பாதிப்புகள் வரை ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தேவையற்ற வெளியேற்றங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.