முகமட் நபியை (ஸல்) இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகச் சந்தேகிக்கப்படும் 47 வயது உள்ளூர் நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணியளவில், ‘Sakti Sakti Sakti’ என்ற பெயரிலான பேஸ்புக் கணக்கில் பதிவிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து குறித்துப் போலீசாருக்குப் புகார் வந்தது என்று, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சூஸ் (Datuk Fadil Marsus) கூறினார்.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று இரவு 8:32 மணியளவில் பினாங்கின் பட்டர்வொர்த் (Butterworth) பகுதியில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
அந்தப் பதிவைப் பதிவிடப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் Vivo 29T ரக அலைபேசியைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று முதல் மார்ச் 27-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்குத் தடுப்புக்காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 298A: மத ரீதியான பகைமையை உருவாக்குதல், தண்டனைச் சட்டம் பிரிவு 505(c): வன்முறையைத் தூண்டும் வகையில் அறிக்கை விடுதல், மற்றும் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233: இணைய வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இனம், மதம் மற்றும் அரச நிறுவனம் (3R) சார்ந்த உணர்வுப்பூர்வமான விஷயங்களைப் பதிவிடுவதையோ அல்லது பகிர்வதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என டத்தோ பாடில் அறிவுறுத்தியுள்ளார். நாட்டின் அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.