கிளந்தான், கோத்தா பாருவில் உள்ள பள்ளி வளாகத்தில் இன்று கார் மோதியதில் முதலாம் படிவம் மாணவி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார். தஞ்சோங் மாஸ் எஸ்.எம்.கே பள்ளியில் நடந்த இந்த விபத்து குறித்த தகவல் நேற்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் கிடைத்ததாக கோத்தா பாரு காவல்துறைத் தலைவர் அஸ்மிர் டமிரி கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
ஓட்டுநர் தவறுதலாக ஆக்சிலரேட்டரை மிதித்ததால், மசூதிக்கு வெளியே இருந்த மாணவிகள் மீது கார் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் கூறினார்.ஒரு சிறுமி தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றொரு சிறுமி ராஜா பெரெம்புவான் ஜைனப் II மருத்துவமனையில் கடுமையான காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஓட்டுநருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக குபாங் கெரியானில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக அஸ்மிர் கூறினார். கவனக்குறைவான அல்லது அபாயகரமான ஓட்டுதலால் மரணத்தை ஏற்படுத்தியதற்காக, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.