பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. இந்த படத்தை பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தன.
அதனை தொடர்ந்து, துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது. பாகிஸ்தானில் செயல்படும் இந்திய உளவாளியின் விறுவிறுப்பான கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், 3 மணி 49 நிமிடங்கள் நீளமுடையதாகும். வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இதுவரை ரூ.1,800கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த வகையில் வரும் மே மாதம் 14-ம் தேதி ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.