Offline
Menu
அம்பாங் இந்தாவில் நிலச்சரிவு: நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவுமில்லை!
By Administrator
Published on 04/20/2026 16:00
News

அம்பாங், கம்போங் அம்பாங் இந்தா (Kampung Ampang Indah) பகுதியில் இன்று மாலை நிகழ்ந்த நிலச்சரிவில் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்று மண்ணில் புதைந்தது. நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.

ஜாலான் இந்தா 4 (Jalan Indah 4) பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்பக்க மலைச்சரிவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மாலை 3:51 மணியளவில் தகவல் கிடைத்த இரண்டு நிமிடங்களிலேயே அம்பாங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 15-க்கு 20 கன மீட்டர் அளவிலான மண் சரிந்து விழுந்ததில், அங்கிருந்த வேன் ஒன்று இடிபாடுகளுக்குள் சிக்கியது.

முதல் நிலச்சரிவு ஏற்பட்ட 16 நிமிடங்களிலேயே, அதற்கு மிக அருகாமையிலேயே மற்றொரு சிறிய நிலச்சரிவும் ஏற்பட்டதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்தது. மேலும் மாலை 3:58 மணியளவில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், 4:45 மணியளவில் மீட்பு நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்ததாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், மலைச்சரிவு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மேலும் மண் சரிவு ஏற்படாமல் இருக்கத் தற்காலிகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Comments