கோலாலம்பூர்:
கிளானா ஜெயா வழித்தடத்திலான எல்.ஆர்.டி (LRT) ரயில் சேவை இன்று காலை பொதுமக்கள் வேலைக்குச் செல்லும் பரபரப்பான நேரத்தில் திடீரென பல இடங்களில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கோம்பாக்கிலிருந்து கிளானா ஜெயா நோக்கிச் சென்ற ரயிலில் ஏற்பட்ட இந்தத் திடீர் நிறுத்தம் (brake) காரணமாக, உள்ளே நின்றுகொண்டிருந்த பயணிகள் நிலைதடுமாறி விழுந்ததோடு, சில இடங்களில் ரயிலின் கதவுகள் லேசாகத் திறந்ததால் பெரும் பதற்றம் நிலவியதாகச் சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தினால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளைப் பயணிகள் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வரும் வேளையில், தொழில்நுட்பக் கோளாறு குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ரயில் சேவை நிறுவனத்திற்குப் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பயணிகள் பலர் தங்களின் அச்சத்தைப் பகிர்ந்துள்ள நிலையில், ரயில் செயல்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர் சிக்கல்கள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.