புத்ராஜெயா: வரவிருக்கும் மாதங்களில் டீசல் மற்றும் உர விநியோகப் பற்றாக்குறையால் எழும் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள, மலேசியர்கள் தங்கள் உறுதியை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளாரத் சாத்தியமான பொருளாதார மந்தநிலையைச் சமாளிக்க, மலேசியர்கள் தங்கள் மீள்திறனை வலுப்படுத்த வேண்டும் என்று அன்வர் கூறினார்.
அடுத்த சில மாதங்களுக்கு நாட்டிற்குப் போதுமான பெட்ரோலிய விநியோகம் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், டீசல் பற்றாக்குறை மற்றும் உர விநியோகப் பிரச்சினைகள் போன்ற சவால்கள் பொருளாதாரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் விநியோகப் பற்றாக்குறை காரணமாக ஏற்படக்கூடிய பொருளாதாரச் சரிவைச் சமாளிக்க, வலுவான அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அடுத்த சில மாதங்களுக்குப் போதுமான பெட்ரோலிய விநியோகம் இருக்கும் என்பதில் நாம் உறுதியாக இருப்பதால், நாம் அதிர்ஷ்டசாலிகள். ஆனால், டீசல் மற்றும் உர விநியோகத்தில் நாம் மேலும் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்று அவர் கூறினார்.
எந்தப் பிரச்சினைகளும் தீர்க்க முடியாதவை என்று நான் நம்பவில்லை. நமக்குத் தேவையானது தேசிய உறுதிப்பாடும், நமது மக்களிடையே வலுவான மீள்திறனைக் கட்டியெழுப்புவதும்தான் என்று உயர்கல்வி அமைச்சகம் நடத்திய ‘புவிசார் அரசியல் நெருக்கடிக் காலங்களில் முஸ்லிம் ஒற்றுமை’ என்ற தலைப்பிலான இல்முவான் மலேசியா மதானி கருத்தரங்கில் தனது தொடக்க உரையில் அவர் கூறினார்.
பல்லின மற்றும் பல மதங்களைக் கொண்ட ஒரு தேசமாக மலேசியாவின் ஒற்றுமையே அதன் பலம் என்றும், அதுவே உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதற்கான ஒரு முக்கிய அடித்தளமாக அமைகிறது என்றும் அவர் கூறினார்.
மேற்கு ஆசியாவில் நீடித்துவரும் மோதல்கள் உலகின் மீது தொலைநோக்கு அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்றும், அதே நேரத்தில் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு, அதிகரித்து வரும் மனிதாபிமான மற்றும் பிராந்திய நெருக்கடிகளுக்கு ஒரு காரணமாக உள்ளது என்றும் அன்வார் கூறினார்.