மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) டெர்மினல் 2-ல் உள்ள 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 27 வயதான சீனப் பெண் ஒருவர் புத்ராஜெயா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மதியம் 2.20 மணியளவில் நிகழ்ந்ததாகக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
விசாரணையில் அந்தப் பெண் இன்று மீண்டும் சீனாவுக்குத் திரும்புவதற்காக விமானத்தில் செல்லத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் அவர் முனையத்தின் வெளிப்புற விளிம்பில் அமர்ந்திருந்ததும், அவரை மீட்கச் சென்ற ஒருவரைக் கண்டு அதிர்ச்சியடைந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தைக் கண்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
விமான நிலைய காவல்துறையினர் இந்த விவகாரத்தைத் திடீர் மரணம் (Sudden Death) என வகைப்படுத்தி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பெண் எதற்காக அங்கு அமர்ந்திருந்தார் அல்லது விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து முழுமையான விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.