பங்சாரில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் மீது, எதிர்தரப்பு குழுவுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட வாய்ப்புள்ளது.
ஜாலான் தெலாவியில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307-ன் கீழ் கொலை முயற்சி குற்றச்சாட்டை அவர் எதிர்கொள்வார்.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி இரவு விடுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்த சில மணி நேரங்களிலேயே, கிள்ளான் பகுதியில் இரண்டு துப்பாக்கிதாரிகள் கைது செய்யப்பட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
மற்றொரு குழுவுடன் ஏற்பட்ட தகராறின் போது, சந்தேக நபர்கள் வானத்தை நோக்கியும், எதிர்தரப்பு குழுவை நோக்கியும் எச்சரிக்கை வேட்டுக்களைத் தீர்த்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஒரு சந்தேக நபர் போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய இருவரும், கிள்ளானில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 307 மற்றும் 1971-ஆம் ஆண்டு துப்பாக்கிச் சட்டம் (அதிகரிக்கப்பட்ட அபராதங்கள்) ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டது.
“27 மற்றும் 33 வயதுடைய இரு சந்தேக நபர்களும் ஏப்ரல் 22 இரவு 11:45 மணிக்கு தடுத்து வைக்கப்பட்டனர். இதில் ஒருவருக்கு 5 முந்தைய குற்றப் பின்னணிகளும், மற்றொருவருக்கு 17 முந்தைய குற்றப் பின்னணிகளும் உள்ளன” என்றும கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ பாடில் மர்சூஸ் கூறினார்.
விசாரணைக்கு உதவும் வகையில், அவர்கள் இருவரும் ஏப்ரல் 29 வரை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.