சென்னை: தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்கும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட வரிசை இப்போது தமிழக அரசியலையே அதிர வைத்துள்ளது.. வழக்கமாகத் தமிழகத்தின் எந்த ஒரு அரசு விழாவாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும், ஆனால் ஆளுநர் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் அது 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது பெரிய சர்ச்சையாகியுள்ளது.. இதைப் பார்த்த திமுக மற்றும் விஜய்க்கு ஆதரவாக இருந்த விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட முதல் நாளிலேயே தங்களது கடுமையான கண்டனத்தை முன்வைத்துள்ளது, தமிழக அரசியல் களத்தையே அசைத்து பார்க்க செய்துள்ளது..!!
தமிழகத்தின் தொன்மையான மரபுகளையும், உணர்ச்சிகரமான அடையாளங்களையும் முன்னிறுத்தி அரசியல் பயணத்தைத் தொடங்கிய தவெக தலைவர் விஜய், தனது முதல் அடியிலேயே "தமிழ்த்தாய் வாழ்த்து" விவகாரத்தில் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து வழக்கமாக தமிழக அரசு விழாக்களின் தொடக்கத்தில் ஒலிக்க வேண்டிய தமிழ்த்தாய் வாழ்த்து, இந்த முறை 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது, வெறுமனே ஒரு வரிசை மாற்றமாக பார்க்கப்படாமல், தமிழினத்தின் அடையாளத்தைப் பின்னுக்கு தள்ளிய செயலாகவே அப்படித்தான் பார்க்கப்படுகிறது.. முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் நிலவிய இந்த நிலைமையை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.. பாஜக ஆளும் மாநிலங்களில் கூட அந்தந்த மாநில பாடல்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் நிலையில், தமிழ் மண்ணில் தமிழ்த்தாய்க்கு இழைக்கப்பட்ட இழிவு இது என திமுக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.. திராவிட கழகத்தலைவர் கி.வீரமணியும் இதற்கு உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ளார்.. ஆனாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, பதவியேற்றதுமே, மூத்த தலைவர் வீரமணியிடம் நேரில் சென்ற விஜய் வாழ்த்தையும் பெற்று வந்தது கவனம் பெற்றுள்ளது.