சென்னை: விஜய் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் சர்ச்சை குறித்து தவெக விளக்கம் அளித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி வாழ்த்துப்பாடலே முதலில் இசைக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என தவெக ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளது. இனி வரும் காலங்களில் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தின் 17 வது முதல்வராக இன்று தவெக தலைவர் விஜய் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். விஜய் முதல்வராக பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பாக வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆதவ் அர்ஜுனா விளக்கம் திமுக, விசிக, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும், விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின. குறிப்பாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்த திருமாவளவனும் என்ன நடந்தது என விளக்க வேண்டும் என்று கூறினார். இந்த நிலையில் தவெக நிர்வாகி ஆதவ அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- 'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும்.