மலேசியாவில் 16 வயதுக்குட்பட்ட பயனர்களின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்படுவதற்கு அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னதாக, தங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட தரவுகளைப் (Data) பாதுகாப்பாகப் பதிவிறக்கம் செய்து மாற்றிக்கொள்ள ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
‘இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025’-இன் (ONSA) கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு விதித்தொகுப்பு (CPC) மற்றும் ஆபத்து குறைப்பு விதித்தொகுப்பு (RMC) ஆகியவை இன்று (ஜூன் 1, 2026) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதாக மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) இன்று வெளியிட்டுள்ளது.
மேலும் புதிய சட்டத்தின்படி, சமூக ஊடகச் சேவை நிறுவனங்களுக்கு (சமூக ஊடகத் தளங்கள்) 6 மாத கால மாற்றக் கட்ட அவகாசம் (Transition Period) வழங்கப்பட்டுள்ளது. இதற்குள் அவர்கள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தற்போது கணக்கு வைத்திருக்கும் அனைத்து பயனர்களின் வயதையும் சமூக ஊடக நிறுவனங்கள் துல்லியமாகச் சரிபார்க்க வேண்டும். இதற்கு மலேசிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சோதனையில் 16 வயதுக்குட்பட்ட பயனர்கள் யாராவது கண்டறியப்பட்டால், அவர்களின் கணக்குகள் முடக்கப்படுவதற்கு அல்லது கட்டுப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, தரவுகளைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு 1 மாத அவகாசம் தரப்படும்.
இன்று முதல் (ஜூன் 1, 2026) உரிமம் பெற்ற சமூக ஊடக நிறுவனங்கள் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே புதிய கணக்குகளைப் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.இந்தக் கடுமையான புதிய விதிகள் Facebook, Instagram, TikTok மற்றும் YouTube உள்ளிட்ட அனைத்து முன்னணி சமூக ஊடகத் தளங்களுக்கும் பொருந்தும் என MCMC தெளிவுபடுத்தியுள்ளது.