மலேசியாவின் கடல் சூழல் அமைப்பிற்கு மிகவும் அழிவுகரமானதும், அதே சமயம் பரவலாகக் கவனிக்கப்படாததுமான அச்சுறுத்தல்களில் ஒன்றாக, கடலில் கைவிடப்படும் இராட்சச மீன்பிடி வலைகள் வேகமாக உருவெடுத்து வருகின்றன என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மரணச் சுழற்சியில் சிக்கித் தவிக்கும் கடல்வாழ் உயிரினங்கள் பொறுப்பற்ற மீன்பிடி நடைமுறைகளின் நேரடி விளைவாகவே, கடலில் கைவிடப்பட்டு மிதக்கும் அல்லது நீரின் அடிமட்டத்தில் சிக்கிக்கொள்ளும் இந்த இராட்சச வலைகள் உருவாகின்றன. சமீபத்திய செய்திகள் சுட்டிக்காட்டுவது போல, இத்தகைய அவல நிலை தொடர்வது, மீனவர்களிடையே விழிப்புணர்வு இன்மையால் ஏற்படுகிறதா அல்லது சுற்றுச்சூழல் பொறுப்பை அவர்கள் வேண்டுமென்றே புறக்கணிப்பதா என்ற தீவிர கவலையை எழுப்புகிறது.
கடலில் தொலைந்து போனாலோ அல்லது கைவிடப்பட்டாலோ, இந்த இராட்சச மீன்பிடி வலைகள் கடல்வாழ் உயிரினங்களை ஒரு மீள முடியாத மரணச் சுழற்சியில் சிக்க வைக்கின்றன. அரிய வகை கிட்டார் சுறாக்கள், கடலாமைகள் மற்றும் பெரிய மீன்கள் இந்த வலைகளில் சிக்கி, மூச்சுத்திணறல் மற்றும் பட்டினியால் துடிதுடித்து இறக்கின்றன. மேலும், சில கடல்வாழ் உயிரினங்கள் இந்த நெகிழி வலைகளை, கடலில் மிதக்கும் ஜெல்லிமீன்கள் எனத் தவறாக நினைத்து உட்கொள்கின்றன. இதன் விளைவாக உடனடியாகப் பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும், அவை விலங்குகளுக்கு நீடித்த மற்றும் கொடூரமான துன்பங்களையே தருகின்றன. இது, இறுதியில் மலேசியக் கடற்பரப்பைக் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கே தகுதியற்ற, பாதுகாப்பற்ற ஒரு இடமாக மாற்றி வருகிறது.” கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலைத் தாண்டி, இந்தச் சேதம் ஒட்டுமொத்த கடல் சூழல் மண்டலத்திற்கும் பரவுகிறது என்று முகைதீன் அப்துல் காதர் சுட்டிக்காட்டினார். இத்தகைய இராட்சச வலைகளின் கழிவுகள் காலப்போக்கில் கடலின் அடிமட்டத்தில் குவிந்து, கடல்களின் இயற்கையான மீள்திறனைப் பலவீனப்படுத்துகின்றன.